யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபராக கல்வியமைச்சினால் தகுதி வாய்ந்த அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முறையற்ற அரசியல் தலையீட்டின் காரணமாக தற்போது மற்றொரு அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது, பதில் அதிபராக இந்திரகுமார் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தரப்பின் “அன்பினை“ பெற்றிருந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்கெனவே இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஈ.பி.டி.பி ஆதரவு தரப்பு, பொதுவான தரப்பு என இரண்டு தரப்பாக இயங்குகிறது.
ஈ.பி.டி.பி ஆதரவு பழைய மாணவர் சங்கத்துடன் பேசிய அமைச்சர் டக்ளஸ், பதில் அதிபர் இந்திரகுமாரை அதிபராக நியமிப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாடசாலைக்கு அதிபரை நியமிப்பதற்காக நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் பாடசாலையின் பிரதி அதிபராக பதவிவகித்தவர் தெரிவாகியிருந்தார். அவர் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்ட கடிதமும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரிடம், பொறுப்புக்களை கையளிக்காமல், பதில் அதிபர் ஒளித்து பிடித்து விளையாடினார். அரச சேவையிலுள்ள ஒருவர் செயற்படுவதற்குரிய ஒழுங்கு முறைகளுக்கு அப்பால் பதில் அதிபர் செயற்பட்டிருந்தார். எனினும், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கும் துணிவு கல்வித்திணைக்களம், கல்வியமைச்சில் இருக்கவில்லை. ஈ.பி.டி.பியின் அரசியல் பின்னணியிருந்தமையினாலேயே பதில் அதிபர் இவ்வாறு முறையற்ற விதமக செயற்பட்டதாக பரவலாக விமர்சிக்கப்பட்டது.
புதிய அதிபருக்கு எதிராக மாணவர்களையும், பெற்றோர்களையும் இந்த தரப்புக்கள் தூண்டி விட்டன. இதனால் மாணவர்கள் சிலர், புதிய அதிபருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். எனினும், பின்னர் தமது தவறை உணர்ந்து, பழைய மாணவர் சங்கத்தின் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலினால் அவ்வாறு செயற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
புதிய அதிபர் பதவியேற்பதை தடுக்கும் நோக்கத்துடன் சிலர் ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டி விடப்பட்டிருந்தனர். அவர்கள், ஆண்கள் பாடசாலையில் பெண் அதிபர் வேண்டாமென சர்ச்சைக்குரிய கோசங்களை எழுப்பியிருந்தனர்.
அண்மையில் ஒரு நாளில் அதிபர் பொறுப்புக்களை கையளிப்பதாக மத்திய கல்லூரியில் பதில் அதிபர் குறிப்பிட்டிருந்தார். புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போதும், பதில் அதிபர் வரவில்லை. அவர் யாருடைய தொடர்பிலும் இருக்கவில்லை. அதிபர் ஒருவர் விதிமுறைகளை மீறி இவ்வாறு செயற்பட்ட போதும், துறைசார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் அரசியல் தலையீடு.
இந்த நிலையில், யாழ் மத்திய கல்லூரியின் ஈ.பி.டி.பி சார்பு பழைய மாணவர் சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில், பதில் அதிபரே பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல்வாதிகள் எவ்வாறு பொறுப்பற்ற விதமக செயற்படுகிறார்கள், பலதுறைகளிலும் மூக்கை நுழைத்து அரசதுறையின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற விமர்சனத்தை மெய்ப்பிப்பதை போல இந்த சம்பவமும் அமைந்துள்ளதை பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய கல்லூரியின் அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பு, அரச நிர்வாகத்தை மீறி, நாட்டாமை பாணியில் அதிபர் நியமனம் நடந்த பின்னணியை இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசனும் அம்பலப்படுத்தியிருந்தார்.



