நட்சத்திர ஹோட்டலில் காதலனை கொலைசெய்த பெண், தனது மற்றொரு காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
புனேயில் கார் டீலராக இருந்தவர் சந்தீப் சுரேஷ் காம்ப்ளி (44). இவர் நேற்று மாலை கவுகாத்தி விமான நிலையம் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் காம்ப்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, காம்ப்ளியுடன் ஒரு பெண் தங்கி இருந்தது தெரியவந்தது. அப்பெண் இரவில் வேறு ஒருவருடன் ஹோட்டலில் இருந்து வெளியேறினார். போலீஸார் ஹோட்டல் பதிவை ஆய்வு செய்தபோது, அப்பெண்ணுடன் சென்ற நபரும் அதே ஹோட்டலில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் மொபைல் போனை கண்காணித்தனர்.
இதில் அப்பெண்ணும் அவருடன் இருந்த நபரும் கவுகாத்தி விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் விமானம் மூலம் கொல்கத்தா செல்ல திட்டமிட்டு இருந்தனர். அதற்குள் போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது.
காம்ப்ளி மட்டுமல்லாமல் கைது செய்யப்பட்ட அஞ்சலி ஷா (25), தன்னுடன் இருந்த பிகாஷ் குமார் ஷா (23) என்பவரையும் காதலித்துள்ளார். ஒரே நேரத்தில் இருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அஞ்சலி, கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றியபோது அங்கு வந்த காம்ப்ளியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அவர் பிகாஷ் குமார் ஷாவுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
சிறிது காலத்தின் பின் காம்ப்ளியுடனான தொடர்பை அஞ்சலி துண்டித்தார்.
ஆனால் அஞ்சலி மீது காதல் வெறி கொண்டிருந்த காம்ப்ளி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தார். அதே சமயம் காம்ப்ளியுடன் அஞ்சலி நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் காம்ப்ளியின் மொபைல் போனில் இருந்தது.
அந்த புகைப்படங்களை வாங்க அஞ்சலியும் ராகேஷும் முடிவு செய்தனர். ஆரம்பத்தில் காம்ப்ளியை கொல்கத்தாவில் சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் காம்ப்ளி கவுகாத்தி சென்றுவிட்டார். அங்கு விமான நிலையம் அருகில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். உடனே அஞ்சலியும் ராகேஷும் கவுகாத்திக்கு சேர்ந்தே சென்றனர்.
அங்கு சென்ற பிறகு இருவரும் பிரிந்து உள்ளே சென்றனர். அஞ்சலி காம்ப்ளி அறைக்கு சென்றுவிட, ராகேஷ் அதே ஹோட்டலில் தனி அறை எடுத்து தங்கினார். ஒரு கட்டத்தில் காம்ப்ளி இருந்த அறைக்கு ராகேஷ் சென்றார். அஞ்சலியும் ராகேஷும் மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்களை கொடுக்கும்படி சண்டையிட்டனர். ஆனால் காம்ப்ளி புகைப்படங்களை கொடுக்க மறுத்தார். இதனால் அவரை அஞ்சலியும் ராகேஷும் சேர்ந்து தாக்கிவிட்டு அவரிடம் இருந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
கைதான இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.