பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களுக்கு காதல் வலை விரித்து, உடலுறவு கொண்டு, அதை படம் பிடித்து, இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டியை சேர்ந்த 18, 19 வயதான இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி மாணவர் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. மற்றொரு மாணவருடன் முன்னர் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
முதலாவது, காதல் உறவின் போது குறித்த மாணவியின் வீட்டில் வைத்து மாணவி பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிது காலத்தின் பின்னர், முதல் காதலன் உறவை முறித்துள்ளார். இந்த சமயத்தில் இரண்டாவது மாணவன், காதல் குறுஞ்செய்திகளை அனுப்பியள்ளார். இது குறித்து முதல் காதலனிடம் மாணவி தெரிவி்த்துள்ளார். காதல் உறவிலிருந்து தான் வெளியேறி விட்டதாகவும், புதிய காதலை தொடருமாறும் மாணவன் தெரிவித்துள்ளார். இதன் பின் மாணவிக்கு இரண்டாவது காதலனுடன் தொடர்பு ஆரம்பித்துள்ளது.
இந்த தொடர்பின் போது, கண்டியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, தனக்கு குடிக்க ஏதோ கொடுத்ததாகவும், அதன்பிறகு நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரான மாணவன், மாணவியைக்கு போதைப்பொருளை கலந்து குடிக்கக் கொடுத்து, நிர்வாணமாக்கி, ஆபாச காட்சிகளை படம்பிடித்து, பலமுறை அதனை காட்டி மிரட்டி, மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு படமாக்கப்பட்ட காட்சிகளை சந்தேகநபரான மாணவன் இணையத்தளம் மற்றும் அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கு மாணவியின் முதல் காதலனும் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் குறித்த மாணவர்களை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளின் போது மேலும் பல மாணவிகள் மற்றும் யுவதிகளின் இதே போன்ற பல ஆபாச வீடியோக்களை மாணவன் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இணையத்தில் வெளியாகியுள்ள நிர்வாணக் காட்சிகள் அடங்கிய காணொளியையடுத்து, கண்டியிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளார் தாயார்.
குறித்த மாணவனை பாடசாலையில் இருந்து வெளியேற்றுவதற்கு பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் கண்டி பாடசாலைகளில் கல்வி கற்று வருவதாகவும் கண்டியை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் விடுதியின் உரிமையாளரையும் அதன் முகாமையாளரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பாடசாலை மாணவர்களும் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.