வரும் மக்களவைத் தேர்தலின்போது, பாஜக கூட்டணியில் இணைந்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட சரத்குமார் முடிவு செய்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாளையங்கோட்டையில் சமக சார்பில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திராவிடக் கட்சிகளை சாடியும், பிரதமர் மோடியைப் புகழ்ந்தும் சரத்குமார் பேசினார். நேற்று பாளையங்கோட்டையில் உள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுடன் சரத்குமார் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். பின்னர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இறைவன் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும்” என்றார்.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, ‘இருக்கலாம்’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார்.
இதன் மூலம் நாடார் சமுதாயத்தினர் அதிகமாக உள்ள திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட சரத்குமார் முடிவு செய்திருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியலில் களம் இறங்க திருநெல்வேலி தொகுதியை தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சரத்குமாரும் திருநெல்வேலியைக் குறிவைத்து அரசியலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார்.



