காதலிக்க மறுத்த தனது உறவினரான யுவதியை பேருந்தில் வைத்து கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பொலிஸார் சந்தேக நபரை கத்தியுடன் கைது செய்துள்ளனர்.
நாரஹேன்பிட்டி நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நேற்று (6) காலியிலிருந்து நாரஹேன்பிட்டிக்கு அதிவேக வீதியூடாக பயணித்த பேருந்தில் யுவதி பயணித்தார். காதல் வெறியனான சந்தேகநபரும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். நாரஹேன்பிட்டி- கிருல வீதி நில அளவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக யுவதி பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போது சந்தேகநபர் அவர் அருகில் வந்து தனது பையிலிருந்த ரம்போ ரக கத்தியை எடுத்து, யுவதியை சரமாரியாக குத்தியுள்ளார்.
யுவதியின் வலது கை முழங்கை பகுதியிலும், இடது காலின் முழங்காலுக்குக் கீழே உள்ள பகுதியிலும், மார்புப் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்தில் பயணித்தவர்களால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், காயமடைந்த யுவதி நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.