ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து ஜனாதிபதி அப்தெல் பத்தா சிஸ்ஸி மற்றும் பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் அம்மானில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி அறிவித்துள்ளார்.
நேற்று மாலை, பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர், அப்பாஸ் கூட்டத்தில் பங்கேற்பதை ரத்து செய்ததாக தெரிவித்தார்.
பிடனுடன் சமீபத்திய இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி விவாதிக்க அமைக்கப்பட்டிருந்த உச்சிமாநாட்டில் அப்பாஸ் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் சிஸ்ஸியுடன் சேர திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பாஸ் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை வாபஸ் பெறுவதாக மூத்த அதிகாரி கூறினார்.
ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி, பிடனுடன் ஜோர்டானில் திட்டமிடப்பட்ட உச்சிமாநாட்டை ஒத்திவைப்பது “அனைவரின் நலன்களுக்கும்” என்று கூறினார்.
“இந்த மாதிரியான ஒரு உச்சிமாநாடு இந்த போரை நிறுத்துவதற்கான அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்று சஃபாடி பேச்சுவார்த்தைகளைப் பற்றி கூறினார்.
அதை செய்ய முடியாது என்பது தெரிந்தும், உச்சிமாநாட்டை அவசரமாக நடத்த வேண்டிய அவசியமில்லையென்றார்.
“போர் அதிக துன்பம், அதிக மரணம், அதிக அழிவை தவிர வேறு எதையும் கொண்டு வரப்போவதில்லை. இது இஸ்ரேலியர்களுக்கோ அல்லது பாலஸ்தீனியர்களுக்கோ பாதுகாப்பை உருவாக்காது. இது முழு பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அச்சுறுத்துகிறது, அது விரிவடைந்து பரவும் உண்மையான அச்சுறுத்தல். இந்தப் போர் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், உடனடியாக பாதிக்கப்பட்ட காசா மக்கள் மீது மட்டுமல்ல. இந்தப் போர் உலகெங்கிலும் உள்ள அரேபிய, முஸ்லீம், கிறிஸ்தவ மக்களின் கருத்தை – மனிதக் கருத்தை, பொதுக் கருத்தை – தூண்டுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் மக்கள் இப்போது தெருக்களில் இருக்கிறார்கள். சுமார் 18,000 ஜோர்டானியர்கள் வீதியில் இறங்கி பேரழிவு, காசா மக்கள் மீதான இந்த ஆக்கிரமிப்பு குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்“ என்றார்.
வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதி செய்தது.
“ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் அப்பாஸ் அறிவித்த துக்க நாட்களில், ஜனாதிபதி பிடன் ஜோர்டானுக்கு தனது பயணத்தையும் இந்த இரு தலைவர்கள் மற்றும் எகிப்தின் ஜனாதிபதி சிசி யுடனான திட்டமிடப்பட்ட சந்திப்பையும் ஒத்திவைப்பார்“ என தெரிவித்தது.
“அவர் விரைவில் இந்த தலைவர்களுடன் நேரில் கலந்தாலோசிக்க எதிர்நோக்குகிறார், மேலும் வரும் நாட்களில் அவர்கள் ஒவ்வொருவருடனும் தொடர்ந்து மற்றும் நேரடியாக ஈடுபட ஒப்புக்கொண்டார்,” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.