கதிர்காமம், கந்தசுரிந்துகம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலை 4.00 மணியளவில் வீட்டின் முன் காத்திருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
முகத்தை மூடிக் கொண்டு வந்த 5 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி56 ரக தானியங்கி துப்பாக்கியையும் கதிர்காமம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டின் முன் நின்றிருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




