29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை ஜனாதிபதி உண்மையிலேயே தேசிய இனப்பிரச்சினை தீர்வில் அக்கறையுடன் உள்ளாரா?: சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

ஜனாதிபதி ரணில் உண்மையிலேயே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தவரையில், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதென்பதே அவரது பிரதானமான சிந்தனையாகும். அதற்குப் பங்கம் வரக்கூடிய எவ்வித நடவடிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இலங்கை ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த 20.07.2023அன்று புதுடெல்லி சென்று இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களைச் சந்தித்த வேளையில் இந்தியாவினால் இலங்கை அதிபருக்கு 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவமாறு வலியுறுத்தப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக கடந்த 26.07.2023 புதன் அன்று மாலை ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

மேற்கண்ட கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

ஜனாதிபதியின் டெல்லி விஜயத்தைத் தொடர்ந்து, 24.07.2023 அன்று மாலை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் திரு.விக்னேஸ்வரனையும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் திரு.சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்பொழுது, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை தாம் நியமித்திருப்பதாகவும் அவர்களினூடாக 13ஆவது திருத்தம் தொடர்பாக பேசி நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதுடன், கலாநிதி விக்னேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் தாம் நியமித்த மூன்றுபேரை உள்ளடக்கிய குழு இவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டது. இவை தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் 26ஆம் திகதி அன்று மாலை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைத்திருந்தார். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜேவிபியையும் தவிர, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ்க் கட்சித் தலைவர்கள், வடக்கு-கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம் கட்சி தலைவர்கள் மற்றும் ஏனைய சிங்கள கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் தமிழ் மக்களுக்கு எவ்வித அதிகாரங்களும் பகிரப்படக்கூடாது என்றும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவே கூடாது என்றும் 13ஆவது திருத்தம் தேவையற்றது என்றும் கூறுகின்ற சிங்கள பௌத்த இனவாதக் கருத்துகளையே தொடர்ந்து பேசிவருகின்ற சரத் வீரசேகர, விமல்வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் மாகாணசபைத் தேர்தல்களை உடன் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை என்றும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி அதுபற்றி யோசிக்கலாம் என்றும் மேற்கண்ட இனவாத தலைவர்கள் கூறினார்கள். ஏனைய சிங்களத் தலைவர்களைப் பொறுத்தவரையில், பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் ஒத்துழைப்பதாகக் கூறினார்கள். அப்படி இருந்தபொழுதும்கூட, உங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் தேவையா? அதிகாரப்பகிர்வு தேவையா என்ற கேள்வியை முன்வைத்து ஜனாதிபதி கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமையானது அவர் உண்மையிலேயே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தவரையில், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதென்பதே அவரது பிரதானமான சிந்தனையாகும். அதற்குப் பங்கம் வரக்கூடிய எவ்வித நடவடிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையைப் பொருளாதார சரிவிலிருந்து மீட்பதற்காக 4பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கிய இந்திய பிரதமரை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் டெல்லியில் சந்தித்தபொழுது, 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதை இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். ஆகவே இந்திய பிரதமரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது, வடக்கு-கிழக்கு, மலையக மக்களின் வாக்கு வங்கிகளையும் இழந்துவிடக்கூடாது, சிங்கள பௌத்த வாக்கு வங்கியையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற கணக்கில் காலம் கடத்துவதே ஜனாதிபதியின் நிலைப்பாடா? என்ற கேள்வி எழுகின்றது.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது 1988ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஜே.ஆர். ஜெயவர்த்;தன அவர்களால் அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட்டது. ஆகவே அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் அவசியம்தானா? என்ற கேள்வியும் எழுகின்றது.

மாறிமாறி சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும் இந்த நாட்டின் சிங்கள மக்களைப் போன்றே பூர்வீகக் குடிகளாவர். அவர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கும் தமது பிரதேசத்தைத் தாமே அபிவிருத்தி செய்துகொள்வதற்கும் சகல உரித்துகளையும் கொண்டவர்கள். அவர்கள் தங்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் மாகாணசபை முறைமை. ஆனால் வடக்கு-கிழக்கிற்கு மட்டும் அதனை மட்டுப்பபடுத்தாமல் சிங்கள பகுதிகளையும் இணைத்து ஒன்பது மாகாணங்களுக்கானதாக ஜே.ஆர். ஜெயவர்த்தன மாற்றியமைத்தார். இப்பொழுதும்கூட, வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள்தான் தமக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஒன்பது மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு பற்றி ஜனாதிபதி அவர்கள் பேசுவது அர்த்தமற்றது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் உட்பட ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வு என்பது அவசியமானது. இவை சிங்கள பகுதிகளுக்குத் தேவையா இல்லையா என்பதை ஜனாதிபதியோ, அரசாங்கமோ தீர்மானிக்கலாம். ஆனால் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு இவை தேவை என்பதை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் தங்களது பிறப்புரிமையான அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, உங்களிடம் யாசகம் கேட்கவில்லை. தருவதற்கோ மறுதலிப்பதற்கோ உங்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இந்த நாட்டின் எதிர்காலம் என்பது இருள்மயமானதாகவே இருக்கும் என்பதை அரசாங்கமும் சிங்கள இனவாத சக்திகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே ஜனாதிபதி அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளைக் கைவிட்டு, 13ஆவது திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முழுமையாக நிறைவேற்ற முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

சாமர சம்பத் எம்.பி கைது செய்யப்பட்டது தொடர்பில் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

Pagetamil

மஹிந்த, ரணிலின் முடியைக்கூட இந்த அரசு தொடாது!

Pagetamil

ஆயுதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாது… ரணில் களி தின்பது உறுதி!

Pagetamil

அச்சுவேலி ப.நோ.கூ.ச தலைமை காரியாலய கட்டடத்திலிருந்து இராணுவம் விலகியது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!