தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டுமென, கூட்டணியிலுள்ள ஒரு பகுதியினர் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம், யாப்பின்படி முழுமையான நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தலைமை தெரிவுக்கு போனால் வீணாண குழப்பங்கள் ஏற்படும், தற்போதுள்ளதை போல கூட்டு தலைமையே நீடிக்கலாம் என்பது இன்னொரு தரப்பின் வாதம்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் புதிய தலைவரை தெரிவு செய்வதா?, யாரை தலைவராக தெரிவு செய்வது என்பது பற்றிய தீவிர கலந்துரையாடல்கள் கூட்டணிக்குள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூத்த அரசியல் தலைவரான த.சித்தார்த்தனே தலைமை பதவியை ஏற்பது பொருத்தமானது என பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். எனினும், தலைமை பதவியை ஏற்பதில் த.சித்தார்த்தன் ஆர்வம் காட்டவில்லையென தெரிகிறது.
கூட்டணியின் செயலாளராக தமது கட்சியை சேர்ந்த ஆர்.இராகவன் செயற்படுவதால், தலைமை பதவியை பிறிதொருவர் வகிப்பதே பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டணியின் தலைமையேற்பதற்கு அனைத்தும் தரப்பின் முழுமையான ஆதரவில்லை.
த.சித்தார்த்தன் பதவியை ஏற்காவிட்டால் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையேற்பதே பொருத்தமானது என கூட்டணியிலுள்ள கணிசமானவர்கள் கருதுகிறார்கள்.
இந்த சர்ச்சைகள் நீடிப்பதால், நாளை தலைமை பதவி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமா என்பது நிச்சயமில்லை. ஆனால் அதுவும் விவாதிக்கப்படும்.
இதுதவிர, கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர், ஊடக பேச்சாளர் போன்ற நியமனங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களும் நாளை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என அறிய முடிகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக சர்ச்சையாக பேசப்படும் ரெலோ உறுப்பினர்கள் தொடர்புபட்ட வர்த்தக நடவடிக்கைகள், எதிர்பார்த்ததை போல செயற்படாத கூட்டமைப்பின் செயற்பாடின்மை உள்ளிட்ட விவகாரங்களும் எழுப்பப்படும் என தெரிகிறது.



