2022 ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 11வது இடமும், இந்தியாவுக்கு 103 வது இடம் கிடைத்துள்ளது.
இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:
சிம்பாப்வே
வெனிசுலா
சிரியா
லெபனான்
சூடான்
அர்ஜெண்டினா
ஏமன்
உக்ரைன்
கியூபா
துருக்கி
வேலையின்மை, பணவீக்கம் காரணமாகவே மேற்கூறிய நாடுகள் துயர் நிலையில் இருப்பதாகவும் அவரது பட்டியல் கூறுகிறது.
இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா ஆகியவை முதல் 15 இடங்களைப் பிடித்த மற்ற நாடுகள்.
சிம்பாப்வே முதலிடம்
சிம்பாப்வேயில் பணவீக்கம் உச்ச நிலையை தொட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி எம்மர்சனின் கொள்கைகள் மக்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா 103வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வேலையின்மைதான் முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடான பின்லாந்து உலகின் மிகவும் துயரமான நாடுகளின் பட்டியலில் 109 வது இடத்தில் உள்ளது. இதற்கு வேலையின்மை மிகவும் முக்கிய காரணியாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், உலகின் துயரமான நாடுகளின் பட்டியலில் 35 வது இடத்தில் உள்ளது, பணவீக்கம் மிகவும் பங்களிக்கும் காரணியாக உள்ளது.
அதேநேரத்தில் பட்டியலில் கடைசி பத்து இடங்களில் மால்டா (148), டோகோ( 149), தாய்லாந்து (150), நைகர் (151), தைவான் (152), மலேசியா (153), ஜப்பான் (154), அயர்லாந்து (155), குவைத் (156), ஸ்விட்சர்லாந்து (157) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறைந்த சதவீதத்தில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.