துருக்கிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேவையான வாக்கு எண்ணிக்கையை தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனும். போட்டியாளர் கிளிக்டரோக்லுவும் பெறவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இரண்டாம் கட்ட தேர்தலை நடத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. மே 28ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், வாக்கு எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
துருக்கியில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கை பெற்றாலே அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். யாருமே 50 வீத வாக்கை பெறாத பட்சத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும்.
தற்போது உத்தியோகபூர்வ அரச ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை எந்த ஒரு வேட்பாளரும் குறைந்தது 50 சதவீத வாக்குகளைப் பெறாத முடிவை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.
தேர்தல் முடிவுகளின் தொடக்கத்தில், தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் முன்னிலை வகித்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் நெருக்கமான நிலையே காணப்படுகிறது.
இதுவரை, அரச செய்தி ஊடகமான அனடோலு ஏஜென்சி மற்றும் டிஆர்டி வேர்ல்ட் அனைத்து வாக்குப் பெட்டிகளிலும் 92.00 சதவீதமானவை எண்ணப்பட்டதன் அடிப்படையில் எர்டோகன் 49.76 சதவீதமும், கிளிக்டரோக்லு 44.48 சதவீதமும் பெற்றுள்ளனர்.
எவ்வாறாயினும், கிலிக்டரோக்லு 47.70 சதவீதமாகவும், எர்டோகன் 45.80 சதவீதமாகவும் இருந்ததாக எதிரணி ஆதரவு Anka செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



