கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மருமகனை வழிமறித்து மாமனார் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைமீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி – கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை பக்கமாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி விட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர். இதில் ஜெகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஜெகனின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் ஜெகனின் உடலை சாலையில் இருந்து எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, எஸ்பி சரோஜ்குமார் தாகூர், டிஎஸ்பி தமிழரசி மற்றும் போலீஸார், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கொலையாளி சங்கர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



