இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்டு வரும சதி முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினரே, வெளிநாட்டிலுள்ள சில “ஆர்வக் கோளாறு“ உடையவர்களின் நிதிப் பின்புலத்தில் இந்த சதி முயற்சி நடப்பதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது.
கனடாவிலுள்ள சில முதியவர்கள் உள்ளிட்ட தரப்பினர் தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதி எம்.பிக்களை மட்டும் கனடாவிற்கு அழைத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு புளகாங்கிதப்பட்டு வருவது நீண்டகாலமாக நடந்து வரும் விடயம்.
இந்த குழுவினரின் பணப்பின்னணியில் இலங்கை தமிழரசு கட்சிக்குள் குளறுபடிகளும், சதி நடவடிக்கைகளும் ஆரம்பித்து, இன்று இலங்கை தமிழ் அரசு கட்சி சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
இந்த குழுவின் பின்னணியில் திருகோணமலையில் நடந்துள்ள குழப்பங்களை, அந்த மாவட்டத்தின் இளைஞரணியினர் கடிதம் மூலம் மத்தியகுழு உறுப்பினர்களிற்கு அறிவித்துள்ளனர். அந்த கடிதமே இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவு இரா.சம்பந்தனிற்கும், மாவை சேனாதிராசாசாவிற்கும் தெரியாமல்- அவர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக- தெரிவு செய்யப்பட்டுள்ள விவகாரம், நேற்று நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வெளிப்பட்டது.
திருகோணமலை வேட்பாளர் தெரிவில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டு, குழுவொன்றை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரா.சம்பந்தன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.