முன்னாள் ஜப்பானிய குத்துச்சண்டை வீரரும், உலகின் நீண்டகால மரண தண்டனைக் கைதியுமான இவோ ஹகமடா (87) மீதான கொலை வழக்கை, மறுவிசாரணை செய்யுமாறு டோக்கியோ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (13) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இவோ ஹகமடா கடந்த 50 வருடங்களாக மரண தண்டனை கைதியாக உள்ளார். உலகின் மிக நீண்டகால மரணதண்டனை கைதி அவர்தான்.
“நான் இந்த நாளுக்காக 57 ஆண்டுகளாக காத்திருந்தேன், அது வந்துவிட்டது” என்று ஹகமடாவின் சகோதரி ஹிடெகோ (90) நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் தெரிவித்தார்.
“இறுதியாக என் தோள்களில் இருந்த பாரம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
1969 இல் தனது முதலாளி, அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து, கொள்ளையடித்ததாக இவோ ஹகமடா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆனால் பின்னர் அவர் ஒரு மிருகத்தனமான போலீஸ் விசாரணையில் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், வாக்குமூலத்தை திரும்பப் பெற அவர் எடுத்த முயற்சிகள் வீணாகி, 1980ல் உச்ச நீதிமன்றத்தால் அவரது மரணதண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
நீண்ட கால சட்டப்போராட்டத்துக்குப் பிறகு, மத்திய நகரமான ஷிசுவோகாவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் 2014 இல் மறுவிசாரணைக்கு அனுமதி அளித்தது. புலனாய்வாளர்கள் ஆதாரங்களை புனைந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்வதாக டோக்கியோவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கு மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.
டோக்கியோ உயர் நீதிமன்றம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் 2020 இல் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, டோக்கியோ உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.



