அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4 கிலோவுக்கும் அதிகமான கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 1300 அமெரிக்க டொலர் பணத்தை தரும் ஆணொருவரிடம் போதைப்பொருளை ஒப்படைக்கவிருந்தது தெரிய வந்துள்ளது.
2023 பெப்ரவரி 28 ஆம் திகதி டுபாயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 25 வயதான வெளிநாட்டு பிரஜை 4.631 கிலோ கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக தன்னிடம் பையை ஒப்படைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ள சந்தேக நபர், அந்த பையை ஆணொருவர் பெற்றுக் கொண்டு 1300 அமெரிக்க டொலர்களை செலுத்துவார் என தம்மிடம் தெரிவிக்கப்பட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



