இளம் யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், தொடங்கொட பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியை பொதுமக்கள் பேருந்திற்குள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் (27) மாலை பயணிகள் பேருந்தில் பயணித்தவர்களால் பிடிக்கப்பட்டு அளுத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கட்டுகுருந்த தேசிய சுகாதார பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளரான தர்கா நகரில் வசிக்கும் 25 வயதான இளம் பெண்ணையே பொலிஸ் அதிகாரி துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த யுவதி பேருந்தில் பயணித்த போது குடும்ப சுகாதார சேவைகள் சீருடையில் இருந்துள்ளார்.
தர்கா நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக கட்டுகுருந்த பேருந்து நிலையத்தில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் ஏறியுள்ளார்.
தலைமை பொலிஸ் பரிசோதகரான பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் அணிந்து இளம் பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தார். பின்னால் இருந்து கையை நீட்டி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது யுவதிக்குத் தெரியாது. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பேருந்து நடத்துனரிடம் சொல்லிவிட்டார். இதன்போது, அளுத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் சிவில் உடையில் அதே பஸ்ஸில் பயணித்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகளின் உதவியுடன் சில்மிசக்காரனை பிடிக்க இந்த சார்ஜன்ட் நடவடிக்கை எடுத்து அளுத்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்போது சார்ஜன்ட் மீது யாரோ ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் முகத்தில் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரியந்த குமார அத்தநாயக்க தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பஸ்ஸில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை அறிந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் துமிந்த ராஜபக்ஷ, பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு அளுத்கம பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி அளுத்கம காவற்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது அவ்வாறான ஆபாசமான செயலில் ஈடுபடவில்லை என தெரிவித்திருந்தார். எனினும், இளம்பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து தெளிவான வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடங்கொட காவல்துறையின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி பணி முடிந்து வீடு திரும்பும் போதே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.



