தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரிடம் நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுமக்களை ஆத்திரமூட்டும் விதமாக சட்டவிரோதமான முறையில் போராட்டம் மற்றும் பேரணியை நடத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கறுவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று அறிவித்துள்ளனர். .
பெப்ரவரி 26 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பேரணி மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் செயற்பாட்டாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான லால்காந்த, டில்வின் சில்வா மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோருக்கு எதிராக இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்படாத இடத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிசாரிடம் அறிக்கை கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.



