யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இனிமேல் தெல்லிப்பளையில் எரிக்கப்படாது!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இனிமேல் தெல்லிப்பளையில் எரிக்கப்படாது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

இனிவரும் நாட்களில் மருத்துவக்கழிவுகள் வவுனியாவில் எரிக்கப்படும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இதுவரை தெல்லிப்பளையில் எரிக்கப்பட்டு வந்தது. அங்கு உரிய சுகாதாரமுறைகள் பின்பற்றப்படாமல், சுற்றுச்சூழலிலுள்ள மக்களிற்கு ஆபத்தான முறையில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதாக பலமுறை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

ஆபத்தானமுறையில் மருத்துவக்கழிவுகள் எரிக்கப்படுவது தொடர்பான காணொளிகளும் அடிக்கடி வெளியாகியுமிருந்தது. எனினும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை, உறுதியான நடவடிக்கையெதையும் எடுக்காமலிருந்தது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக தற்போது செயற்பட்டு வரும் வைத்தியர் யமுனானந்தா, இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை எடுத்து, இனிமேல் மருத்துவக்கழிவுகள் தெல்லிப்பளைக்கு அனுப்பப்படாது என அறிவித்துள்ளார்.

நாளை முதல் மருத்துவக்கழிவுகள் வவுனியாவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

முடிவிற்கான காரணம்

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள மருத்துவக்கழிவுகள் எரிக்கும் இடத்தில் உரிய சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு பல வருடங்களாக உள்ளது. எரியூட்டும் இடத்தின் வசதிகளும் தற்போது மோசமாகியுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதி மக்கள், நோயாளர்கள் பலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறையிட்டதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

அத்துடன், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் தெல்லிப்பளையில் மருத்துவக்கழிவுகள் எரியூட்டப்படும் இடத்திற்கு களவிஜயமும் செய்தனர்.

இதன்போது, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மருத்துவக்கழிவுகளை இனிமேல் தெல்லிப்பளையில் எரியூட்டுவதில்லையென்ற முடிவை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் யமுனானந்தா அறிவித்தார்.

ஆளுனரின் தலையீட்டால் சிக்கல்

இதேவேளை, இந்த உயர்மட்ட சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் சகல சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் வசதியொன்றை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா முட்டுக்கட்டையிட்டு வருவதும் தெரிய வந்தது.

கோம்பையன் மணல் மயானத்தில் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் மையத்தை நிறுவ சுற்றாடல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, யாழ் மாநகரசபை ஆகியன அனுமதியளித்தன.

மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் வசதியை நிறுவ ஏற்கனவே 4 இடங்களில் முயற்சித்து தோல்வியடைந்திருந்தது. வடமராட்சி கப்பூது வெளி, மண்டைதீவு, வேலணை, அராலி பகுதிகளில் எரியூட்டும் மையங்களை நிறுவ முயன்று, அந்த பகுதியிலிருந்து கிளம்பிய எதிர்ப்பினால் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

தற்போது 5வது இடமாக கோம்பையன் மணல் மயானம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அங்கு எரியூட்டும் இடத்தை அமைக்க முடியாதென ஆளுனர் கடிதம் அனுப்பியுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. ஆளுனரின் நடவடிக்கையினால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்