இரத்தினபுரி, குருவிட்ட பொலிஸ் பிரிவிலுள்ள புனித ஜோக்கிம் தோட்டத்தில் வசித்து வந்த ஒன்றரை வயது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறையடுத்து ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 3.30 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் 29 வயதுடைய தாயார் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதாகவும், தாயாலேயே பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பிள்ளைகளின் தாத்தா பாட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த குழந்தைகளின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
நேற்றுக் காலை இரண்டு குழந்தைகளும் கிணற்றில் விழுந்துவிட்டன, அவர்களை தான் வெளியே எடுத்து, தேயிலை தோட்டத்தில் வைத்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார். அவராலேயே பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிசார், அவரை கைது செய்துள்ளனர்.
இரு பிள்ளைகளின் 30 வயதுடைய தந்தை, குறித்த தினத்தில் மனைவியை தேடி, அவரது தெரணியகல வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகள் இறந்த பிறகு, தாய் வலிநிவாரணி மாத்திரைகள் என்று சில மாத்திரைகளை உட்கொண்டார், இது தற்கொலை முயற்சி என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை மருத்துவரிடம் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



