கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா ஆண்டு தோரும் கச்சத்தீவில் நடைபெறும். இதில் இந்தியா-இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் மாதம் 3, 4ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 8500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர் .
இந்நிலையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன் வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில் விழா ஒருங்கிணைப்பு குழுவினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சந்தித்து விழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வேர்கோடு பங்குத் தந்தை கூறுகையில்:
இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இருக்கின்றனர். மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனு கோரப்பட்டுள்ளது.
கச்சத்தீவு கடற்கரையில் வெயிலில் மக்கள் வாடாமல் இருப்பதற்கு பந்தல் மற்றும் உணவுகள் இந்திய தூதரகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து திருப்பயணிகள் நல்ல முறையில் விழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். வெளிமாவட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்று ஆதார் கார்டுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு அலுவலர்களும் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



