மத்திய அரசு 2016ஆம் ஆண்டு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் சரியானது என்றாலும், அதை செயல்படுத்திய விதம் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் மாறுபட்ட தீர்ப்பை அவர் வழங்கினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 58 வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த வழக்கில் குளிர்கால விடுமுறைக்கு முன்பாகவே விசாரணை முடிந்து விட்ட நிலையில், விடுமுறை முடிந்து வந்த முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 நீதிபதிகளில் 4:1 என்ற பெரும்பான்மையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து. நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், “எனது கண்ணோட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது. 2016-ம் ஆண்டு இருந்த நிலையை இப்போது திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனாலும், அந்த நடவடிக்கை சட்டத்திற்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம். அதனால் அது சட்டத்திற்கு விரோதமானது. அந்த நடவடிக்கை செயல்முறை படுத்தப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது.
சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்ல நோக்கத்திற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் சிறந்த எண்ணம், நல்ல நோக்கம் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளே இங்கு மதிப்பிடப்படுகின்றனவே தவிர, அதன் நோக்கம் இல்லை. கருப்பு பணம், பயங்கரவாத நிதி, கள்ள நோட்டு புழக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நல்ல செயலும் நல்ல எண்ணமும் ஆகும்.



