இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக ஜனவரி 17ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் இணைந்து தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் ராஜாங்க அமைச்சர் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முன்னதாக, இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் தாக்கல் செய்த வழக்கை கவனத்தில் கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் இராஜாங்க அமைச்சர் நிஷாந்தவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அவருக்கு ஏன் தண்டனை வழங்கக் கூடாது என்பது குறித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து விடுவித்தமை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டதுடன், அது நீதி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதற்கு சமம் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
சனத் நிஷாந்த எதிர்கால நீதிமன்ற உத்தரவுகளில் செல்வாக்கு செலுத்த முயற்சித்ததாகவும் பொதுவாக நீதித்துறையை அச்சுறுத்தவும் முயற்சித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம், இராஜாங்க அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதேவேளை, இன்றைய விசாரணையின் போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




