இன்று (24) தீபாவளி பண்டிகை உலகெல்லாம் உள்ள இந்துக்களாலும், சைவர்களாலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்துக்களாலும், சைவர்களாலும் புனித நாளாக கருதப்படும் தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று வருகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலை எழுந்து தலையில் எண்ணெய் வைத்து முழுகுவார்கள். பின்னர் இறைவனை வழிபட்டு புத்தாடை அணிவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வார்கள்.
வீடுகளில் விதவிதமான பலகாரங்கள் இனிப்பு மற்றும் உணவு வகைகளை தயார் செய்து தீபாவளி பண்டிகையை வரவேற்பார்கள் .இந்நன்னாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வார்கள்.
மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்தினரை சேர்ந்தவர்களுக்கும் மக்கள் இனிப்புகள் வழங்கி தங்களுடைய அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா உள்ளிட்ட சில இடங்களில் சீக்கியர்கள், ஜைன மதத்தினர் மற்றும் புத்த மதத்தினராலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள், சைவர்களின் நம்பிக்கையின்படி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக தீபாளி கருதப்படுகிறது. வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவசாம் முடிந்து நாடு திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாடுவதற்காக மக்கள் வழக்கமாக வர்த்தக நிலையங்களில் அலைமோதுவதை போன்ற நிலைமை இம்முறை காணப்படவில்லை. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், தீபாவளி வர்த்தகம் இம்முறை சோபிக்கவில்லையென வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு, மலையகத்தின் பிரதான நகரங்களில் நேற்றும் மக்கள் குறைவாகவே காணப்பட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு இலங்கையில் இன்று மின்தடையும் அமுலாகாது.
தீமை எனும் இருள் போக்கி நன்மை எனும் ஒளி பெருகுவதை குறிக்கும் இந்நன்னாளில் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தமிழ்பக்கம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.