நேற்று (9) காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கலைத்த விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்களை நினைவுகூரும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
காலிமுகத்திடலை ஒட்டி மாலை 5.30 மணியளவில் போராட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி போராட்டத்தை கலைக்க பொலிஸார் முயற்சித்தனர்.
இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தின் போது 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகளுடன் இருந்தவர்களையும் பொலிசார் கைது செய்ய முயற்சித்த போது, குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
பொலிஸாரின் அத்துமீறலை கண்டித்து சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




