பல நாடுகள் புகலிடம் வழங்க மறுத்ததையடுத்து அண்மையில் நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது, தனக்கு நெருக்கமானவர்களினால் தவறாக வழிநடத்தப்பட்டு விட்டார் என சாக்குப் போக்குகூறி, மக்களை நம்ப வைத்து, மக்கள் மத்தியில் தோல்வியடைந்த இமேஜை துடைக்க இரகசிய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
கோட்டா ஜனாதிபதியாக இருந்தபோது ‘கம சமக பிலிசந்தர’ திட்டத்தின் கீழ் விஜயம் செய்த கிராமங்களுக்கு தற்போது ஊடகவியலாளர் மற்றும் வர்த்தகர் ஒருவரால் அமைக்கப்பட்ட குழுவொன்று விஜயம் செய்து வருவதாகவும், இந்த உறுப்பினர்கள் மக்களிடம் பேசி வருவதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குழுவினர், கோட்டாவிற்கு வெள்ளையடிக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.
கோட்டா தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை தவறாக வழிநடத்தினார்கள் என்றும் அந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்களில் கோட்டாபய ராஜபக்ஷ மீதான மக்களின் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும், முன்னாள் ஜனாதிபதி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை சோதிப்பதற்காகவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன.
வியத்மக அணிக்கு நிகரான இந்தக் குழுவால் நடத்தப்படும் சமூக ஊடக கணக்குகள், தோல்வியடைந்த ஜனாதிபதி எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா என மக்களின் உணர்வுகளைக் கண்காணித்து வருகின்றனர். எனினும் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்படவில்லை.
மறுபுறம், கோட்டா அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டாலும், ராஜபக்ச தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பார் என்றும், தனது மகன் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க மட்டுமே அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கோட்டா தொடர்ந்து டலஸ் முகாமுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஆனால் கட்சியின் வீழ்ச்சிக்கு அவரைக் குற்றம் சாட்டிய பெரும்பான்மையான மூத்த பெரமுன உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
உண்மையில் அவர் தவறாக வழிநடத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் கரிம உரக் கொள்கையை அமுல்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கரிம உரத்தடையானது கட்சியை அரசியல்ரீதியாக அழிப்பதோடு விவசாயத் தொழிலுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தனது சகோதரருக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி தனது தீர்மானத்தை நிலைநாட்டி சில மாதங்களுக்கு பின்னர் சேதம் அதிகமானதை தொடர்ந்து மன்னிப்பு கோரியிருந்தார்.
கோட்டாபய ராஜபக்சவின் பெயர் கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும், அவரிடமிருந்து கட்சி விலகி இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்பதனால் தற்போதைய ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்படுமாறும் வரிசைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவருக்கு உதவுமாறும் மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு அறிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச, கட்சி உறுப்பினர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்காமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் அவ்வாறு தப்பிச் சென்றிருக்கக் கூடாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ கட்சியினர் மத்தியில் தெரிவித்திருந்தார்.