உத்தேச சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (06) பாராளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பில் விவாதம் நடத்துமாறு கோரியதையடுத்து இன்று குறித்த சட்டமூலம் மீதான விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்ற அலுவல்களுக்கான குழு, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்ற முடிவு செய்திருந்தது.
2022 பட்ஜெட்டில், அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கையாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆண்டுக்கு விற்றுமுதல் ரூ.120 மில்லியனுக்கும் அதிக வருமானமுடையவர்களிடமிருந்து 2.5 சதவீதம் என்ற விகிதத்தில் வரி அறவிடுவதே இந்த சட்டமூலத்தின் நோக்கம்.




