லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு 44.5 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரியை வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி ஓமல்பே சோபித தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, இந்த மனுவின் எதிர்மனுதாரர்களுக்கு ஆட்சேபனைகளை பதினைந்து நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி .சனத் விஜேவர்தன தாக்கல் செய்த இந்த மனுவில், லங்கா நிலக்கரி நிறுவனம், அதன் தலைவர் ஜகத் பெரேரா மற்றும் அதன் பணிப்பாளர் சபை, நிலக்கரி கொள்வனவு தொடர்பான அமைச்சரவைக் குழு, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிளாக்சன் நிறுவனம் மற்றும் பலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
பிரியந்த ஜயவர்தன, எஸ். துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிக்கும் பிரதான நிறுவனமே முதலாவது பிரதிவாதி நிறுவனம் எனவும் அதில் 60 வீத உரிமை இலங்கை மின்சார சபைக்கு சொந்தமானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு 10% நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டு மனுவில் 19ஆவது பிரதிவாதியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 22ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இதன் காரணமாக மலிவான மற்றும் உயர்தர நிலக்கரியை பெற்றுக்கொள்ளும் நன்மையை இலங்கை இழந்துள்ளது.
இந்த சப்ளையர் ஒரு டன் நிலக்கரியின் விலையை 295.22 அமெரிக்க டொலர்களாக நிர்ணயித்துள்ளார், இது நடைமுறையில் உள்ள சந்தை விலையை விட மிக அதிகம் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், முழுச் செயல்முறையும் சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ள மனுதாரர், உரிய ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.




