கேரளாவிலிருந்து கடல் மார்க்கமாக கனடா செல்ல முயன்ற 24 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்கள்.
கொல்லத்தில் உள்ள லொட்ஜ் அறையில் இருந்து, 11 இலங்கையர்களை, போலீசார் நேற்று முன்தினம் திங்கள்கிழமை அதிகாலை 2.45 அளவில் கைது செய்தனர். மேலும் அகதிகள் கொல்லம் வந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை, கொல்லத்தில் உள்ள வாடி துறைமுகத்தில் 13 பேர் கொண்ட குழு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதை போலீஸார் நேற்று காலை பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் கைது செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் கும்பலை சேர்ந்த இருவர் தப்பியோடினர், பின்னர் மங்களபுரத்தில் பேருந்தில் இருந்து பிடிபட்டு கொல்லம் நகர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எட்டு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தஞ்சாவூரில் இருந்து ரயில் மூலம் எர்ணாகுளம் வந்து, அங்கிருந்து கொல்லம் வந்து, நகரில் உள்ள இரண்டு லொட்ஜ்களில் மாறி மாறி தங்கியிருந்தனர்.
கொல்லத்தில் உள்ள விடுதிகளில் மேலும் இலங்கையர்கள் தங்கியுள்ளனரா என்பதை கண்டறிய விரிவான தேடுதல் நகரம் முழுவதும் நடந்து வருகிறது.
முன்னதாக ஜூலை 19 அன்று விசிட்டிங் விசாவில் தமிழகம் வந்த திருகோணமலையை சேர்ந்த சுதர்சன் (27), பவித்திரன் (27) ஆகியோர் திடீரென மாயமானது குறித்து தமிழக கியூ பிராஞ்ச் குழுவினர் விசாரணை நடத்தினர்.
அகதிகள் முகாமில் இருந்து மேலும் பல இலங்கை பிரஜைகளும் காணாமல் போயுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கியூ-பிராஞ்ச் அதிகாரிகள், காணாமல் போனவர்கள் கொல்லம் சென்று கொண்டிருப்பதை, மொபைல் டவர் வழியாக கண்டறிந்து, கேரள காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஹோட்டல் ஒன்றில் இருந்து 11 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த சுதர்சன் (27), பவித்ரன் (27); தமிழகம், திருச்சி, வளவந்தான்கோட்டை அகதிகள் முகாமில் தங்கியிருந்த சரவணன் (24), அஜய் (24), பிரசாத் (24), மதிவண்ணன் (35), குயின்ஸ் ராஜ் (22), ஜர்சூல் (21); சென்னையில் இருந்து வந்த தினேஷ்குமார் (36), நவநீதன் (24), திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வந்த பிரகாஷ் ராஜ் (22) ஆகியோரே கைதாகினர்.
இதை தொடர்ந்து நேற்று 13 பேர் கைதாகினர்.
விசாரணையின் போது, அவர்களில் சிலர், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி படகில் ஏறும் திட்டம் தோல்வியடைந்ததால், கேரளாவுக்கு மாற்றப்பட்டதாக போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலோர், இந்தியாவின் தெற்குக் கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் கனடா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக, கொழும்பில் உள்ள லக்ஷ்மன என்ற ஏஜெண்டிடம் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை இலங்கை ரூபாயை செலுத்தினர்.
கேரளாவின் பிற பகுதிகளில் மேலும் பலர் தங்கியிருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளையும் எச்சரித்துள்ளனர்.