முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அப்படியொரு முடிவை எடுப்பார் என்று தாம் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (19) கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இருக்க வேண்டும். அவர் தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்து, இந்த நாட்டிற்காக பணியாற்றினார். எனவே, அவர் போராட்டக்காரர்களுக்கு பயந்து வெளிநாடுகளில் ஒளிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது. இது அவரது மனித உரிமை மீறலாகும்.
எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
அதேபோன்று இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது இடைக்கால நிர்வாகத்தையோ விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில், இந்தப் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது. நாடு டொலர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
இன்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத்தில் 145 எம்பிக்கள் உள்ளனர். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் பொதுஜன பெரமுன 125க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் அந்த பெரும்பான்மை பெரும் பலமாக உள்ளது.
அதேபோன்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானோர் இன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த அரசாங்கத்தின் போது ஜேவிபி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியுடன் இருந்தன. ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது எம்மை விட அவர்களுக்கு இலகுவானது.
இதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரிடம் அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் ஆதரவளிக்குமாறு கூறியிருந்தோம். அதற்காக அமைச்சுப் பதவிகளைத் துறக்கவும், தியாகங்களைச் செய்யவும் தயாராக உள்ளோம்” என்றார்.
அத்துடன், அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களை நியமனம் செய்வதற்கு பொருத்தமான நபர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரணதுங்க மேலும் தெரிவித்தார்.