மே 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பொலிஸ் வீதித் தடையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ரத்தா என்ற ரதிது சேனாரத்ன உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை நேற்று (9) பிறப்பித்தார்.
நீதிமன்றத்தினால் முன்னர் வெளியிடப்பட்ட நோட்டீஸின் பிரகாரம், சந்தேகநபர்களான அருட்தந்தை சத்தியவேல், தமிதா அபேரத்ன, ரத்தா எனப்படும் ரதிந்து சேனாரத்ன, ஜகத் மனுவரன, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
கடந்த மே மாதம் 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள நுழைவு வீதியில் பொலிசார் மற்றும் சிறைச்சாலை பேருந்துக்கு இடையூறு விளைவித்தமைக்காக சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இது தொடர்பான வழக்கு பொலிஸாரால் மோசடியான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உண்மைகளை பரிசீலித்த நீதவான் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்ததுடன், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை இன்று (10) கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.




