பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஆற்றில் சிக்கியுள்ள பெலுகா வகைத் திமிங்கிலத்தைக் காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை குறைந்துள்ளது.
சென்ற செவ்வாய்க்கிழமையன்று ஆங்கில நீரிணையின் வழியே பாரிஸிலுள்ள சியேன் ஆற்றிற்கு நீந்திச்சென்ற அந்தத் திமிங்கிலம் முதன்முறையாகத் தென்பட்டது. சென்ற வெள்ளிக்கிழமையிலிருந்து அது ஆற்றின் இரு இடங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது.
வழக்கமாக குளிர்ந்த நீரில் வாழ்பவை இந்தவகை திமிங்கிலங்கள். அதனை நீரோட்டமற்ற அதிக வெப்பமுள்ள ஆற்றில் விட்டுவிடமுடியாது என்பதால் அதனையடுத்த ஓரிரு நாள்களில் அங்கிருந்து இடமாற்றியே ஆகவேண்டும் என்று கருதப்படுகிறது.
அந்தத் திமிங்கிலத்தின் உடல் மெலிந்து காணப்பட்டதால் நிபுணர்கள் அது உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று தெரிவித்தனர்.
அந்த திமிங்கிலத்துக்குத் தானாகவே கடலுக்குத் திரும்பும் இயல்பும் இல்லை என்று நம்பப்படுகிறது. அதனைப் படகில் கட்டி கடல்வரை இழுத்துச் செல்வதும் ஆபத்தானது.
அந்தத் திமிங்கிலத்தைக் காப்பாற்ற வேறெந்த வழியும் இல்லை என்றாலும் அதனைக் கருணைக்கொலை செய்வதை மீட்பாளர்கள் மறுத்துவிட்டனர்.
தற்போது பிறர் அழைக்கும்போது அந்தத் திமிங்கிலம் தலையைத் திருப்புவதாகவும் உணவு அளிக்கும்போது உண்ண மறுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு விற்றமின்கள், மற்றும் பசியை தூண்டும் மருந்துகள் ஏற்றப்பட்டுள்ளது. எனினும், உணவு உண்ணவில்லை. இதனால், தீவிர நோயினால் உணவு உண்ண முடியாமலுள்ளதாக கருதுவதாக சம்பவ இடத்தில் இருந்த கடல் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான சீ ஷெப்பர்டின் தலைவர் லாம்யா எஸ்ஸெம்லாலி தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் இந்த ஆற்றுக்குள் நுழைந்த ஒர்க்கா திமிங்கத்தை காப்பாற்றும் முயற்சிகள் வெற்றியளிக்காமல் பட்டினியால் இறந்தது. அதன் முடிவை பெலுகாவும் அனுபவிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.
இதேவேளை, பெலுகாவை கருணைக் கொலை செய்யும் யோசனையையும் லாம்யா எஸ்ஸெம்லாலி நிராகரித்துள்ளார்.
“இந்த கட்டத்தில் அது முன்கூட்டிய நடவடிக்கையாக அமைந்து விடும். ஏனெனில் அது இன்னும் வீரியம், ஆர்வமுள்ள நடத்தையுடன் காணப்படுகிறது. அது தலையைத் திருப்புகிறது, அது தூண்டுதலுக்கு வினைபுரிகிறது”. என்றார்.