ராஜபக்ஷ குடும்பத்துடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் தற்போதும் தொடர்பை பேணி வருகின்றார் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் சுமந்திரன் தரப்பினரின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்கு தெரியும். நாட்டில் போராட்டம் ஆரம்பமாகிய போது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூறியதாக ஒரு செய்தி வந்தது.அவர் என்ன கூறினார். அதாவது இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒரு திட்டம் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அந்த திட்டமானது ரணில் விக்கிரமசிங்கவிடம் பதவியை வழங்குவோம். அவர் அதை பத்திரமாக வைத்திருந்து எம்மிடம் திருப்பி தருவார் என்பதே.
இந்த விடயம் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வதற்கு 3 கிழமைக்குள் எமக்கு கிடைத்த தகவல் ஆகும்.சாணக்கியனுக்கு தான் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.சாணக்கியனே எனக்கு சொன்னார்.அவருக்கு (சாணக்கியன்) அந்த பக்கத்தில் இன்னும் தொடர்புகள் இருக்கின்றது. அத்தொடர்பு நன்மைக்காகவே இருக்கின்றது. இவ்விடயங்கள் குறித்து எமது கட்சி கூட்டத்திலும் நான் தெரிவித்துள்ளேன் என்றார்.
இராசபுத்திரன் சாணக்கியன் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு சில வாரங்களின் முன்னர் வரை, மஹிந்த ராஜபக்ஸ தரப்புடன் நெருக்கமாக செயற்பட்டதுடன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-பா.டிலான்-




