சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை தொடர்ந்து பெறுவதற்காக, பாகிஸ்தான் அரசாங்கம் எரிபொருள் விலையை வியாழக்கிழமை உயர்த்தியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை லிட்டருக்கு ரூ.30 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் வியாழக்கிழமை அறிவித்தார், இந்த விலை உயர்வு வியாழன் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
விலை உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் விலை ரூ.179.86 ஆகவும், டீசல் விலை ரூ.174.15 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.155.56 ஆகவும் இருக்கும்.
நிதியமைச்சர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திதுடனான கடன் திட்டத்தை மீள ஆரம்பிப்பதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கினார்.
விலையை உயர்த்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று இஸ்மாயில் கூறினார், மேலும் புதிய விலை நிர்ணயத்தின் கீழ் கூட “டீசலுக்கு லிட்டருக்கு ரூ56 நஷ்டத்தை நாங்கள் இன்னும் சுமக்கிறோம்” என்று கூறினார்.
“நாங்கள் விமர்சனங்களை எதிர்கொள்வோம் ஆனால் அரசும் அதன் நலனும் எங்களுக்கு முக்கியம், அதை காப்பாற்ற வேண்டியது அவசியம்” என்று கூறிய அவர், இந்த முடிவின் அரசியல் விளைவுகளை அரசாங்கம் அறிந்திருப்பதாகக் கருதினார்.
நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாடு “தவறான திசையில்” சென்றிருக்கலாம் என்றார். இந்த முடிவு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புக்கு கடினமானது என்றும், “அரசியலுக்காக நாட்டை மூழ்கடிக்க விட முடியாது” என்றும் அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் 6 பில்லியன் டொலர் உதவித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்திலிருந்து நிதியை பெற்றுக்கொள்ளவே, விலை உயர்வு அமுலாகிறது.
சர்வதேச நாணய நிதியமும், பாகிஸ்தான் அரசாங்கமும் நேற்று வியாழக்கிழமை ஒரு ஒப்பந்தத்தை எட்டியதாக தெரிகிறது. அதன்படி, எரிபொருளுக்கான மானியங்களை நீக்கி விலைகளை உயர்த்தினால், 900 மில்லியன் டொலரை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும்.
இலங்கையை போலவே பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கும் நாளாந்தம் பல மணித்தியால மின்வெட்டு அமுலாகிறது.



