பாகிஸ்தானில் மொடல் அழகியொருவர் சகோதரனால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் ஆணவக்கொலை செய்யப்படும் சம்வங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும், மொடல் அழகியுமான கந்தீல் பலூச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொலை செய்தது பாகிஸ்தான் மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல் ஒரு சம்பவம் தற்போது மீண்டும் நடந்துள்ளது.
ஈதுல் பித்ர் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்குச் சென்றபோது, மொடல் அழகி அவரது சகோதரரால் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா காலித் என்கிற 22 வயது மொடல் அழகி. ஆனால் சித்ரா இந்த துறையில் இருப்பதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.
இது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், எனவே நடனம் மற்றும் மொடலிங் துறையில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் சித்ராவை அவரது குடுபம்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் சித்ரா அதை ஏற்கவில்லை.
சித்ரா பைசலாபாத் நகரில் தங்கியிருந்து மொடலிங் துறையில் பணிபுரிந்தார்.
ஈதுல் பித்ர் விடுமுறையின் போது சித்ரா தனது பெற்றோரை சந்திக்க ஒகராவிற்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் வீட்டுக்கு வந்திருந்தார்.
பெற்றோரும், சகோதரரும் மொடலிங் செய்வதை விட்டு விலகுமாறு மீண்டும் வற்புறுத்தியதாகவும், ஆனால் சித்ரா அதை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர் வீட்டை விட்டு வெளியேறுவதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு ஒரு அறைக்குள் சென்றதாக கூறப்படுகிறது, ஆனால் அவரது சகோதரர் ஹம்சா அவளை சுட்டுக் கொன்றார்.
கொலையின் பின்னர் சந்தேக நபர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரியாலா காவல் நிலைய எஸ்.ஹெச்.ஓ ஜாவேத் கான் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஆதாரங்களை சேகரித்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இறந்தவரின் தாயின் புகாரின் பேரில் ஹம்சா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சித்ரா காலித்துக்கு நான்கு சகோதரிகள் இருப்பதாகவும், இரண்டு மூத்தவர்கள் திருமணமானவர்கள் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சித்ரா பட்டப்படிப்பை முடித்த பின், கடந்த நான்கு வருடங்களாக இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் பைசலாபாத் ஆகிய இடங்களில் மொடலிங் பணிகளை செய்துள்ளார்.
சந்தேக நபரான ஹம்சா ஐந்து சகோதரிகளிற்கு ஒரே சகோதரர் ஆவார். இவர்களது தந்தை துணை ராணுவப் படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மொடலிங் துறை தமது மரபுகளிற்கு எதிரானது என குடும்பத்தினர் கருதுவதாக உறவினர் ஒருவர் கூறினார்.
ஒரு வருடம் கழித்து ஈத் கொண்டாடுவதற்காக சித்ரா தனது பெற்றோரின் வீட்டிற்கு வருத போது, குடும்பக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, இதன் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்தது.

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் ஒரு தீவிரமான பிரச்சனையாகவே இருக்கின்றன என்றும், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இதுபோன்ற 1,000 வழக்குகள் பதிவாகின்றன என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.