மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடற்கரை காணியொன்றில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டதன் பொருட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களின் வழக்கு இன்று(03) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறாத காரணத்தினால் குறித்த வழக்கானது எதிர்வரும் 06.06.2022 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் குருசுமுத்து விமலசேன (68) என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமையினால் 10 பேரில் 9 பேரே ஆஜராயிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 02 பெண்கள் உட்பட 10 பேர்கள் 18.5.2021 ஆம் திகதியன்று கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் நீதி மன்றின் கட்டளைக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 8.12.2021 ஆம் திகதியன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவர்களது வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதி மன்றம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையம் சென்று 9-12 மணிக்குள் கையொப்பமிடல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்டையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று இவ் வழக்கில் சட்டத்தரணி எம்.எச்.எம்.றம்சீன் ஆஜராகியிருந்தார்.
-ருத்திரன்-