மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர் இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்பவரை தாக்கிய நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
ஊடகவியலாளரை தாக்கிய சந்தேக நபரை ஏறாவூர் பொலிசார் கைது செய்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தினார்கள்.
பொலிசாரின் சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரின் தொலைபேசி தொடர்பான அறிக்கையினையும் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செங்கலடி வைத்தியசாலைக்கு வந்த பொலிசார் தமது தொலைபேசியினை பெற்றுச் சென்றுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்தார்.
வந்நாறுமூலை சந்தைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் நியாயம் கேட்டு கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது தமது தொலைபேசியூடாக வீடியோ எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர், கிழக்கு பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும் வே.நந்தகுகுமார் (கண்ணன்) என்பவரால் தாக்கப்பட்டார்.
தொடர்ந்து குறித்த சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்ற நலன் விரும்பிகள் தாக்கப்பட்டனர். ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்த நபரினால் அச்சுறுத்தப்பட்டனர்.
தாக்குதல் மேற்கொண்டவர், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் கட்சியை சேர்ந்தவரென சிலர் குற்றம்சுமத்தியிருந்தனர். எனினும், தங்கள் கட்சிக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கிரானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரை நேரில் சந்தித்து நலன் விசாரித்திருந்தார்.
-ருத்திரன்-