25.9 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

ரீல் to  ரியல் ஜனாதிபதி: யார் இந்த வொலாடிமிர் ஜெலன்ஸ்கி?

தலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை நெருங்கிய சமயம் அது. ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி, தலிபான் படைகளை எதிர்க்க துணிவில்லாமல், மக்களைப் பற்றி கவலையில்லாமல் தனி ஹெலிகொப்டரில் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். இத்தனைக்கும், அதற்கு முதல்நாள்கூட, தலிபான்களை எதிர்த்து போரிடப் போவதாக அமெரிக்காவிடம் கூறியிருந்தார்.

இதேபோன்ற சூழல்தான் இப்போது உக்ரைனிலும். சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானை போல அல்லாமல், ரஷ்ய படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது உக்ரைன். அவர்களின் இராணுவக் கிடங்குகள் தொடங்கி முக்கிய தளவாடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ரஷ்யா. ஆனாலும், உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.

“ரஷ்யாவின் முதல் இலக்கு நான் தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில்தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் உள்ளது. ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். என்ன நடந்தாலும் எனது மக்களை கைவிட மாட்டேன். இங்கேயே தான் தொடர்ந்து இருப்பேன்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவின் அத்துமீறலையும், உக்ரைன் உதவியில்லாமல் தனித்து விடப்பட்டுள்ளதையும் உருக்கமான வார்த்தைகளால் சுட்டிக்காட்டி உலகை உலுக்கி வருகிறார்.

இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி மட்டுமே. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் ஜனாதிபதியாக ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்தபோது, தனது தேசம் சந்தித்து வரும் இந்த நூற்றாண்டின் கொடிய போர்களில் ஒன்றை வழிநடத்துவோம் என ஜெலன்ஸ்கி எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அரசியல் நகர்வுகள், அந்த மோசமான நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது.

ரீல் to  ரியல் ஜனாதிபதி

உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு இப்பொழுது 44 வயது.

1978இல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில் பிறந்த வொலாடிமிர் ஓலெக்ஸாண்ட்ரோவிச் ஜெலன்ஸ்கி, யூத பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெலன்ஸ்கியின் பாடசாலைக் கல்வி முதல் ஆரம்ப வாழ்க்கை முழுவதும் ரஷ்ய மொழியியை சுற்றியே இருந்தது.

செமியோன் இவனோவிச் ஜெலென்ஸ்கி என்ற அவரது தாத்தா இரண்டாம் உலகப் போரின் போது செம்படையில் பணியாற்றினார்.

ஜெலென்ஸ்கி தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு மங்கோலிய நகரமான எர்டெனெட்டில் தனது தந்தை பணிபுரிந்த இடத்தில் வசித்து வந்தார். அவர் தனது உயர்நிலைப் பாடசாலைக் கல்வியையும் முடித்த பின்னர், எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பின்னர் அவர் Kryvyi Rih இன்ஸ்டிடியூட் ஒப் எகனோமிக்ஸ் சென்று சட்டப் பட்டம் பெற்றார். ஆனால் அவர் சட்டத்துறையில் வேலைக்குச் செல்லவில்லை.

ஜெலன்ஸ்கிக்கு கலைகளிலேயே அதிக ஆர்வம். அந்த ஆர்வம் அவரை நகைச்சுவை நாடக குழுக்களில் சேர வழிவகுத்தது. கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கினார். ஜெலன்ஸ்கி மற்றும் மற்ற நடிகர்கள் ‘குவார்டல் 95’ என்ற குழுவை உருவாக்கி நகைச்சுவை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

மேடை நிகழ்ச்சிகளாகத் தொடங்கி 2003இல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்யும் அளவுக்கு ‘குவார்டல் 95’ குழுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாடகங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தற்கால அரசியல் சூழல்களை நையாண்டிகளாக்கி மக்களை சிரிக்க வைத்தனர்.

இந்த அரசியல் நையாண்டியின் மூளை ஜெலன்ஸ்கியே. அவரே இதை முன்னின்று நடிக்கவும் செய்தார். இவர்கள் குழு, 2015இல் தொகுத்த நிகழ்ச்சியே, ‘மக்கள் சேவகன்’ (Servant of the People).

உக்ரைனின் ஐந்தாவது ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியின் ஊழல்கள் மற்றும் ரஷ்ய சார்பை இந்த நிகழ்ச்சி வழக்கமான அரசியல் நையாண்டியால் துளைத்தெடுத்தது. சோவியத்தில் இருந்த பிரிந்து தனி சுதந்திர நாடான பிறகு உக்ரைனின் ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட ஊழல் மற்றும் தவறுகளுக்கு எதிராக கொந்தளிப்பான மனநிலையில் இருந்த உக்ரேனிய மக்கள் மத்தியில் ‘மக்கள் சேவகன்’ நிகழ்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில், பாடசாலை மாணவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் வரலாற்று ஆசிரியர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார் ஜெலன்ஸ்கி. மாணவர்கள் பாடம் எடுப்பது போல் உக்ரைன் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய செயல்களுக்கு நல்ல ரீச். எந்த அளவுக்கு என்றால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘குவார்டல் 95’ குழு ‘மக்கள் சேவகன்’ என்ற அதே பெயரில் கட்சியாக உருமாறும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஜெலன்ஸ்கி அபரிமிதமான புகழ்பெற்றார்.

இறுதியாக ஜனாதிபதி வேட்பளராகவும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்தார். பிரச்சாரங்களில் பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியை தனது வழக்கமான அரசியல் நையாண்டி பாணியில் வறுத்தெடுத்தவர், யூடியூப் போன்ற சமூக ஊடங்கங்கள் வாயிலாக உக்ரைனிய இளைஞர்களையும், மக்களையும் கவர்ந்தார். அவர் உக்ரைனிய தேசியவாதத்தை வளர்த்து, ரஷ்ய எதிர்ப்பை வளர்த்தார். ஏற்கனவே ரஷ்ய வெறுப்பிலிருந்த மக்கள் அவரை ஆதரிக்க தொடங்கினர்.

ரஷ்யாவுடனான சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை கட்டுப்படுத்துவது, உக்ரைனை நேட்டோவில் இணைப்பது என்பன ஜெலன்ஸ்கியின் ஜனாதிபதி  தேர்தல்  முக்கிய வாக்குறுதிகள். புதிய உக்ரைன் தேசியவாதியாகவும், அமெரிக்க சார்பானவராகவும் காட்சியளித்த ஜெலன்ஸ்கிக்கு மக்கள் அமோக ஆதரவளித்தனர்.

எதிர்பார்த்து போலவே மிகப்பெரிய வெற்றி. 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைனின் ஆறாவது ஜனாதிபதியாக 2019இல் அரியசானத்தை கைப்பற்றினார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மோதல் முற்றிய நிலையில், ரஷ்யாவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதனை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தார். பேச்சுவார்த்தைகள், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என சமாதான நடவடிக்கைளை அவர் தரப்பு தொடங்கினாலும், அவரது அமெரிக்க சார்பு நிலையால், ரஷ்யா சந்தேகத்துடனேயே அணுகியது. இதனால், அந்த நடவடிக்கைகள் எதுவுமே முழுமை அடையாமல் தோல்வியை சந்தித்தது.

ஒருகட்டத்தில் ரஷ்யாவின் அழுத்தங்களை சமாளிக்க தனது முந்தைய அணுகுமுறையை மாற்றிய ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இடம்பெறுவதற்கு முயற்சியை மேற்கொண்டார். இந்த முயற்சியே ரஷ்யாவுடன் தற்போது நடந்துவரும் போருக்கு வழிவகுத்தது.

ஜெலன்ஸ்கியின் இந்த அணுகுமுறை ரஷ்யாவை பெரியளவில் சினமூட்டியது.

ரஷ்ய ஜனாதிபதி புடின் பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பகுதியான கிழக்கு உக்ரைனில் வசித்த மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்குவதாக அறிவித்தார்.

போர் நடவடிக்கையால் நேற்று முதல் உக்ரைன் 137 இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை இழந்துள்ள நிலையில், “ரஷ்யர்களே, நான் நாஜி என்று உங்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. நான் எப்படி நாஜி ஆக முடியும்?. சோவியத் இராணுவத்தில் இணைந்து தனது வாழ்க்கை முழுவதையும் நாஜிக்களுக்கு எதிரான போரில் கழித்து என் தாத்தா, சுதந்திர உக்ரைனில் ஒரு கேணலாக இறந்தது பலருக்கு தெரியாது. அப்படிப்பட்ட வழியில் வந்த நான் எப்படி நாஜி ஆக இருக்க முடியும்.

நீங்கள் (ரஷ்யர்கள்) எதற்காக, யாருடன் சண்டையிடுகிறீர்கள்? உங்களில் பலர் உக்ரைனுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களில் பலருக்கு உக்ரைனில் குடும்பம் உள்ளது. சிலர் உக்ரைனின் பல்கலைக்கழகங்களில் படித்தீர்கள். உங்களுக்கு உக்ரைன் நண்பர் ஒருவர் இருப்பார். எங்கள் குணம் உங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை நீங்கள் அறிவீர்கள். எங்கள் கொள்கைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் எதை மதிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே போருக்கான காரணத்தை உங்கள் தலைவரிடம் நீங்களே கேளுங்கள்.

ஓர் ஜனாதிபதியாக அல்ல, ஒரு உக்ரைன் குடிமகனாக சமாதான வாய்ப்புக்காகக் கெஞ்சுகிறேன். எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். மொஸ்கோ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும், ஆனால் உக்ரைன் தனது சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. மக்களுடன் நான் எப்போதும் துணை இருப்பேன்” என்று உணர்ச்சிகரமான பேச்சை இன்று காலையில் நிகழ்த்தினார்.

இதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் ஜெலன்ஸ்கியை கொண்டாடி வருகிறார்கள்.

அதேநேரம், ஜெலன்ஸ்கி பற்றி விமர்சனங்களும் உள்ளன.

ஜனாதிபதியாக பதவிவகித்த போது, தாம் பணிபுரிந்த தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்துகொள்கிறார், முறையற்ற விதமாக அந்த நிறுவனம் சொத்து திரட்ட உதவுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்நாட்டில் எதிர்ப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது.

மற்ற உலகத் தலைவர்களுக்கு நிகரான ஆளுமையை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

தற்போது, ரஷ்யாவுடன் உறவு மோசமானதை தொடர்ந்து, நிலைமையைச் சீராக்க அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் முத்தரப்புச் சந்திப்பு நடத்த முயற்சி செய்தார். ஆனால் ரஷ்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில் அவர் அமெரிக்காவை நம்பி செயற்படாமல், ரஷ்யாவுடன் வெளிப்படையான அணுகுமுறையுடன் பேசியிருக்கலாமென்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

பேச்சுக்கள் குழம்பி, இரண்டு மாதங்களுக்கு முன் ரஷ்யா படையெடுப்புக்குத் தயாரானபோது, அதை கையாள போதுமான கால அவகாசம் இருந்தும் அதை முறியடிக்க உத்திகளை வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ஜெலன்ஸ்கி மீது வைக்கப்படுகிறது.

நேட்டோ கூட்டணியில் இணையவேண்டும் என்பது உக்ரைனின் கனவு. ரஷ்யாவை எதிர்த்துக்கொண்டு அதை நிறைவேற்றுவது, மந்திரத்தால் மாங்காய் வரவழைக்கும் முயற்சி. ஜெலன்ஸ்கியின் முயற்சி இப்பொழுது போரில் முடிந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், அப்போதைய வேட்பாளர் பைடனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திரட்டும்படி, அப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் இவரிடம் கூறியிருந்தார். பதிலுக்கு இராணுவ உதவி வழங்குவதாக டிரம்ப் உறுதியளித்தார். அது வெளிச்சத்துக்கு வந்து, ட்ரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றம் அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

எனினும், ட்ரம்ப் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், வெளிநாட்டு தேர்தலில் தலையிட விரும்பவில்லையென்றும் பின்னர் கூறினார்.

உலக நாடுகளின் தலைவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சேர்த்து வைத்துள்ள சொத்து விபரங்களை பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) அம்பலப்படுத்தியிருந்தது. இதில்,ஜெலன்ஸ்கி வெளிநாட்டில் சட்டவிரோதமாக சேர்த்து வைத்துள்ள சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டன. எனினும், அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment