கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை (1419.72 கோடி இலங்கை ரூபா) வெற்றி பெற்றுள்ளார்.
பொன்னுத்துரை மனோகரன் (54) என்பவரே, Lotto Max அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
பொன்னுத்துரை மனோகரன் பொன்னுத்துரை, தனது தந்தையின் கனவுகளால் ஈர்க்கப்பட்டு 30 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுச்களை வாங்கிவருவதாகத் தெரிவித்தார்.
“ஒரு நாள் ‘பெரிய’ வெற்றியைப் பற்றி நான் பல கனவுகளைக் கொண்டிருந்தேன் என அவர் தெரிவித்தார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 2,800 டொலர் பரிசு வென்றார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த வெற்றியல்ல.
டிசம்பர் 17ஆம் திகதி சீட்டிழுப்பின் போது, பிராம்ப்டனில் ஒரு வெற்றிகரமான டிக்கெட் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தனது லோட்டோ டிக்கெட்டை வெளியே எடுத்து, எண்களை சரிபார்த்தார். அவரது முதல் நான்கு எண்கள் பொருத்தமாக இருப்பதைக் கண்டார்.
“நான் மிகவும் நடுங்கினேன், என்னால் தொடர முடியவில்லை,” என்று பொன்னுத்துரை கூறினார்.
மீதமுள்ள எண்களைப் படிக்க உதவுமாறு அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்தார். “ஒவ்வொரு எண்ணும் பொருந்தும்போது, என் இதயம் வேகமாக துடித்தது.” என்றார்.
இப்பொழுது கோடீஸ்வரராக மாறினாலும், சிறு உற்பத்தி நிறுவன உரிமையாளரான மனோகரன் பொன்னுத்துரை, இந்த வெற்றிக்குப் பிறகு ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றார். தன்னை நம்பி பணிபுரியும் ஊழியர்களை தான் கைவிடப்போவதில்லை எனவும் கூறினார்.
எனினும், அவரது மனைவி வேலையை விட்டுவிட்டு, மீண்டும் பாடசாலை செல்லவுள்ளதாக தெரிவித்தார்.
தனது குடும்பத்திற்காக புதிய வீடொன்றை கொள்வனவு செய்வதும், மத்திய தரைக்கடல் கரையோரங்களை சுற்றிப்பார்ப்பதையும் தனது முதலில் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.



