தன் மீது அசிட் வீசி முகத்தை அலங்கோலப்படுத்திய முன்னாள் காதலனையே திருமணம் செய்துகொண்டுள்ளார் யுவதியொருவர்.
துருக்கியில் இந்த சம்பவம் நடந்தது.
2019 ஆம் ஆண்டில், பர்ஃபின் ஓஸேக் என்ற 20 வயதான யுவதி, முன்னாள் காதலன் காசிம் ஓசன் செல்டிக் என்ற 23 வயது இளைஞனால் தாக்கப்பட்டார்.
காதல் உறவை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காசிம், பர்ஃபினின் முகத்தில் அசிட் வீசினார்.
அதனால் பர்ஃபின், 30 வீத கண்பார்வையை இழக்க நேரிட்டது; அவரது முகமும் உருக்குலைந்து போனது.
காசிம் ஓசன் செல்டிக் கைதாகினார்.
இருப்பினும், இருவருக்கும் இடையே கடிதத் தொடர்பு நீடித்ததில், பர்ஃபினிடம், காசிம் பலமுறை மன்னிப்புக் கேட்டார். தனது காதலை ஏற்கும்படியும், முறைப்பாட்டை மீள பெறுமாறும் காசிம் பலமுறை கெஞ்சினார். அவர்களது காதல் மீண்டும் மலர்ந்தது.
பர்ஃபின் மனமிரங்கி முறைப்பாட்டை திரும்பப் பெற முடிவு செய்தார். எனினும், துருக்கி சமூக ஊடகங்களில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
எனினும், பர்ஃபின் முடிவில் உறுதியாக இருந்தார். காசிம் தவறு செய்ததை உணர்ந்ததாகவும், அதனால் முறைப்பாட்டை மீளப் பெறுமாறு தனது சட்டத்தரணியிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
துருக்கிய மாகாணமான ஹடேயில் உள்ள இஸ்கெண்டருன் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், முன்னாள் காதலனுக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், கோவிட் நிலைமையினால் அவர் முன்கூட்டியே அவர் தகுதிகாண் நிலையில் விடுவிக்கப்பட்டார், மேலும் அவர் சேவை செய்ய வேண்டிய கால குறிக்கப்பட்டுள்ளது.
இருவரும் இம்மாதத் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
எனினும், தமக்குத் தெரியாமலேயே இருவரும் திருமணம் செய்துகொண்டதாக பர்ஃபினின் தந்தை கவலை தெரிவித்தார்.
“நான் அவளுக்காக இத்தனை ஆண்டுகளாகப் போராடினேன். இப்போது அனைத்தும் வீணாகிவிட்டது.” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபட்ட காதலனோடு மீண்டும் ஒன்று சேர்ந்ததற்காக, சமூக ஊடகத்தில் பலரும் அந்தத் தம்பதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். காசிம் தப்பிப்பதற்காக பர்ஃபினை பயன்படுத்தியுள்ளதாகவும், சில மாதங்களில் அந்த பெண் அதை உணர்வார் என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.