மும்பையில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து வீரர் அஜஸ் படேல் 10 விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, அஸ்வின், முகமது சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சமனிலையில் முடிந்தது.
இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120, சகா 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மயங்க் 150 ரன்களிலும், சகா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் அஸ்வின், ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 52 ரன்களும், ஜெயந்த் யாதவ் 12 ரன்களிலும், முகம்மது சிராஜ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அஜஸ் படேல் சாதனை
இந்த போட்டியில் 47.5 ஓவர்களில் 119 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஜஸ் படேல் படைத்தார்.
இதற்கு முன்பு பிரிட்டனின் ஜிம் லகர், கடந்த 1956ஆம் ஆண்டில் மான்செஸ்டரில் நடந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் சாய்த்தார்.
இந்தியாவின் அனில் கும்ப்ளே, கடந்த 1999ஆம் ஆண்டு, டில்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் எடுத்து சாதனை படைத்தனர்.
இன்று (4) சாதனை படைத்த அஜஸ் படேல், 11வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். கடந்த 1988ஆம் ஆண்டு ஒக்டோபரில் மும்பையில் பிறந்த அஜஸ் படேல், பிறந்த மண்ணிலேயே சாதனை படைத்துள்ளார். அஜஸ் படேலுக்கு கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நியூசிலாந்து திணறல்
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடக்கியது. ஆரம்பம் முதலே, இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக ஜேமிசன் 17 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து லதம் 10 ரன்கள் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆரம்பத்தில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி லதம் , வில் யங் மற்றும் ரோஸ் டெய்லர் விக்கெட்களை சாய்த்தார். பின்னர், அஸ்வின் பந்துவீச்சை நியூசிலாந்து அணி சமாளிக்க முடியவில்லை. நிக்கோலஸ், டாம் பிளண்டப், டிம் சவுத்தி, வில்லியம் சோமர்விலே ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தினார். அக்சர் படேல் 2 , ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 263 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.