பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று மாலை (04) தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாகவும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை ஜனாதிபதியிடம் இன்று மாலை தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சீல்கோட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளராக கடமையாற்றி கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் சடலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.