இலங்கையில் இஸ்லாமிய அரசின் இரண்டாவது கட்டளைத் தளபதியாக இருந்த நௌபர் மௌலவி இந்த ஆண்டு நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் உடனடியாக தாக்குதல் நடத்த தலைவர் சஹ்ரான் திட்டமிட்டதால் ஏற்பட்ட தகராற்றினால் அது நடைபெறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நௌபர் தற்போது காவலில் உள்ளார். விரைவில் அவர் மீதான நீதிமன்ற விசாரணை நடத்தப்படும்.
2021 இல் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு காவல்துறையின் காவலில் இருப்பதால் அனைத்து திட்டங்களும் சிதைக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன கொழும்பு ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இஸ்லாமிய அரசை விரிவுபடுத்துவதற்கும் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்துவதற்கும் நௌஃபர் மௌலவி ஒரு சித்தாந்தத்தைக் கொண்டிருந்தார். ஆனால் உடனடித் தாக்குதல்களை நடத்த விரும்பிய சஹ்ரானுடன் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டார் என்று கூறினார்.
மார்ச் 2019 இல் கிறிஸ்ட்சேர்ச்சில் மசூதித் தாக்குதலை தொடர்ந்து, உடனடியாக தாக்குதலை நடத்துவதென முடிவு செய்த சஹ்ரான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு வழிவகுத்த தாக்குதல்களை உடனடியாக நடத்தத் தயாராகுமாறு தனது குழுவிற்குத் தெரிவித்தார்.
மாகாணங்களில் இரண்டாவது அலை தாக்குதல்களுக்கு சஹ்ரானின் குழு திட்டமிட்டிருந்ததற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன. சுதந்திர தின கொண்டாட்டங்கள் உட்பட அரச மற்றும் பொதுமக்களின் இலக்குகளை அவர்கள் கண்காணித்தனர்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காத்தான்குடியில் சூஃபி முஸ்லிம்களுடன் மோதலுக்குப் பின்னர் சஹ்ரான் தலைமறைவாகிய பின்னர், தேசிய தவ்ஹீத் ஜமாத்தை வழிநடத்திய தனது சகோதரர் ஜைனி மௌலவியிடம் சஹ்ரான் இரண்டாவது அலை தாக்குதல்களை ஒப்படைத்தார்.
ஸஹ்ரானின் சகோதரர்கள் ஜைனி மற்றும் ரில்வான் கண்டி எசல பெரஹரா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் நௌஃபர், மற்றும் இராணுவப் பிரிவின் மில்ஹானால் கண்காணிக்கப்பட்டது.
கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரி ஹஸ்துன்,
இலக்குகளை நேரடியாக கண்காணிக்கப்படுவதற்கு முன்பு இணையம் ஊடாக கண்காணித்தார்.
இரண்டாவது அலை தாக்குதல் இலக்கில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு யூதாஸ் ததேயுஸ் தேவாலயமும் அடங்கும், இது சாரா ஜாஸ்மினின் ஸ்மார்ட்போன் மூலம் கண்காணிக்கப்பட்டது.
சாரா ஜாஸ்மின் மதம் மாறுவதற்கு முன்பும், ஐ.எஸ். சித்தாந்தத்தை எடுத்துக்கொள்வதற்கும் முன்பும் இந்த தேவாலயத்தில் வழிபாட்டிற்குச் சென்றுள்ளார். சஹ்ரானின் மனைவி ஹதியா, அரச மற்றும் காவல்துறை உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரணையின் போது இதை வெளிப்படுத்தினார்.
“இரண்டாம் அலை தாக்குதல்கள் அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தியிருக்கும். ஈஸ்டர் தாக்குதல் குழுவை விட தாக்குதல் குழு பெரியதாக இருந்தது. எவ்வாறாயினும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்த அப்பகுதி முஸ்லிம்களின் உதவியின் பேரில், அம்பாறையில் உள்ள அவர்களது பாதுகாப்பு இல்லத்தை பொலிஸாரும் இராணுவமும் சுற்றி வளைத்த போது, இரண்டாவது தாக்குதல் குழு உறுப்பினர்கள் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது பாரிய தற்கொலையில் உயிரிழந்தனர். முஸ்லீம்களின் உதவி இல்லாவிட்டால், இந்த மக்கள் அன்றைய தினம் பிடிபடாமல் இருந்திருக்கலாம்” என்று பேராசிரியர் குணரத்ன கூறினார்.
சாய்ந்தமருது தற்கொலை சம்பவத்தன்று, அன்றிரவு அந்த வீட்டில் சாரா ஜாஸ்மின் மற்றும் சியோன் தேவாலய குண்டுதாரியின் மனைவி பெரோசா உட்பட 17 பேர் இருந்தனர். பாதுகாப்பு இல்லத்திற்குள் தற்கொலை குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சஹ்ரானின் மனைவி ஹதியா தனது மகளுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
சாரா ஜாஸ்மின் அந்த சம்பவத்தில் கொல்லப்படவில்லை என்ற வதந்தியை அடுத்து,
சாரா ஜஸ்மின் அன்றிரவு கொல்லப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் சகல சடலங்களையும் தோண்டி எடுத்து, சாரா ஜஸ்மினின் தாயாரின் DNA உடன் ஒப்பீடு செய்ய பொலிஸார் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். நீதிமன்ற அனுமதி கிடைத்தால், அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து அவரது மரணத்தை உறுதிப்படுத்துவார்கள்.
5 அமெரிக்க பிரஜைகள் உட்பட 268 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதளு க்கு பொருள் உதவி வழங்கியதற்காக அமெரிக்க நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கையர்களில் நௌஃபரும் ஒருவர்.
சஹ்ரான் அதிநவீன பாதுகாப்பான வீடுகளை கட்டியெழுப்பினார். அம்பாறையில் மறைந்திருக்கவும் பயிற்சிக்காகவும் அவர் 8 வீடுகளை வாங்கினார் அல்லது வாடகைக்கு எடுத்தார்.
இராணுவ புலனாய்வு மற்றும் அரச புலனாய்வு இயக்குனரகத்தில் பணிபுரியும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை காரணமாக, விரைவான கைதுகள் மற்றும் தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து இன்று பயங்கரவாத அச்சுறுத்தல் வெகுவாகக் குறைந்துள்ளதாக பேராசிரியர் குணரத்ன தெரிவித்தார்.



