கனடாவில் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதற்கு ஹெல்த் கனடா அனுமதி அளித்துள்ளது. சிறார்களுக்கு covid-19 தடுப்பூசி மருந்துகளை அங்கீகரித்து இருப்பதால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் வகுப்பறைக்குள் முக கவசம் அணிந்துகொள்ள அவசியம் இல்லாத நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வார தொடக்கத்திலிருந்து சிறார்களுக்கான covid-19 தடுப்பூசி மருந்துகளை அனைத்து மாகாணங்களிலும் வழங்க தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி 5 முதல் 11 வயது வரையில் உள்ள சிறார்களுக்கான பைசர் பயோடெக் தடுப்பூசி மருந்துகளை அங்கீகரிக்குமாறு ஹெல்த் கனடாவிடம் பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.
ஹெல்த் கனடா பைசர் தடுப்பூசி மருந்துகளின் தரவுகளை மதிப்பாய்வு செய்து, தற்போது அங்கீகரித்துள்ளது.
சிறார்கள் மீதான சோதனை முடிவில், covid-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் 90.7% பயனுள்ளதாக இருந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறார்களுக்கான covid-19 தடுப்பூசி மருந்துகள் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை கொண்டுள்ளன. மேலும் பக்க விளைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.
கனடாவில் covid-19 வைரஸ் தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் covid-19 வழக்குகளின் எண்ணிக்கையில் பைசர் தடுப்பூசி மருந்துகள் அங்கீகரிக்கப்பட்டது அனைவருக்கும் நல்ல செய்தியாகும் என்று ஹெல்த் கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் சுப்ரியா சர்மா கூறினார்.