பெங்களூருவை அடுத்துள்ள மாகடி அருகே ஜனகெரே கிராமம் உள்ளது. இங்கு ரவீஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 250 ஆண்டு பழமையான பலா மரம் உள்ளது. ரவீஷ் குடும்பத்தினர் கடந்த 10 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த மரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். 19.5 மீ உயரமும், 6.5 மீ சுற்றளவும் கொண்ட இந்த மரத்தை ரவீஷ் வேலி அமைத்து பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே. நாராயண கவுடா கூறியதாவது:
ஜனகெரே கிராமத்தில் உள்ள பலா மரம், நாட்டிலேயே மிகவும் வயதான பலா மரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனது தலைமையில் 4 வேளாண் விஞ்ஞானிகள் இந்த பலா மரத்தை 5ஆண்டுகள் ஆய்வு செய்தோம். இந்த மரம் வயதால் தொன்மையானது மட்டுமல்லாமல் அதன் பழங்கள் தனித்துவமான சுவை கொண்டது. மைசூருவின் முந்தைய மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டோரும் இந்த மரத்தின் பழங்களை விரும்பி சாப்பிட்டுள்ளனர். எனவே இந்த மரத்தில் இருந்து லட்சக்கணக்கான நாற்றுகளும், ஒட்டுக் கன்றுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மரம், ஆண்டுக்கு 250 முதல் 300 பலா பழங்களை காய்க்கிறது. ஒவ்வொரு பழமும் 8 கிலோ முதல் 20 கிலோ வரை எடைக் கொண்டதாக இருக்கும். அதன் மூலம் ஒரு பழம் ரூ.250 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மரம் மற்றும் பழங்களின் பண்புகளை வைத்து பல்வேறு வேளாண் விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்துள்ளனர். இந்த மரம் நீண்ட பாரம்பரியம் வாய்ந்தது என தெரியவந்துள்ளதால், பாரம்பரிய அந்தஸ்து வழங்குமாறு மத்திய வேளாண்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தை மதிப்பீடு செய்த அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை விஞ்ஞானிகளும் இந்த மரம் பாரம்பரிய அந்தஸ்துக்கு தகுதியானது என சான்றளித்துள்ளனர். எனவே இந்த மரத்துக்கு விரைவில் பாரம்பரிய அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.