தனது எருமை மாடு சரியாக பால் கறக்கவில்லை என கூறி மாட்டை கையோடு அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றங்கள் தொடர்பாக, நகை, பணம், வாகனங்கள் தொலைந்ததாக, சண்டை சச்சரவுகள் என பல வகையான புகார்கள் கொடுப்பதற்காக பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு செல்வது வாடிக்கையான நிகழ்வு தான். ஆனால் எப்போதாவது தான் மிகவும் விநோதமான புகார்களுடன் போலீஸ் நிலையத்துக்கு சிலர் வருவதுண்டு. அந்த வகையில் எருமை மாடு சரியாக பால் கறக்கவில்லை என்ற விநோத புகாருடன் காவல் திகைத்தப் போனார்கள்.
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள நயோகான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாபுலால் ஜாதவ் (45).
நேற்று (13) அங்குள்ள காவல்நிலையத்துக்கு சென்ற விவசாயி பாபுலால் ஜாதவ், தனது எருமை மாடு கடந்த சில தினங்களாகவே சரியாக பால் கறக்கவில்லை என எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார்.
இதனால் அங்கிருந்த காவலர்கள் திகைத்துப் போனார்கள். பின்னர் அங்கிருந்து சென்ற விவசாயி பாபுலால், வீட்டுக்கு சென்று தனது எருமை மாட்டை காவல் நிலையத்துக்கு கையோடு அழைத்து வந்து, இது தான் என் எருமை மாடு, கடந்த சில தினங்களாகவே என் எருமை மாடு சரியாக பால்கறக்கவில்லை எனவே காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நடந்தது என்ன?
விவசாயி பாபுலாலின் எருமை மாடு கடந்த சில தினங்களாக பால் சரியாக கறக்காததால், யாரேனும் மாட்டுக்கு மாந்ரீகம் செய்து சூனியம் வைத்திருக்கலாம் என கிராமத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்நிலையத்துக்கு சென்றால் கட்டாயம் உன் பிரச்னை தீர்க்கப்படும் என கிராம மக்கள் சிலர் கூறியதன் பேரில், விவசாயி பாபுலால் காவல்நிலையத்துக்கு தனது மாட்டை அழைத்து வந்திருக்கிறார்.
இருப்பினும் விஷயத்தை புரிந்து கொண்ட போலீசார் தங்கள் மீது நம்பிக்கை வைத்து காவல்நிலையம் வந்த விவசாயியை அங்கிருந்து அனுப்பாமல், மாட்டுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கலாம் எனவே கால்நடை மருத்துவரிடம் சென்று மாட்டை காட்டுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதனிடையே விவசாயி பாபுலால் இன்று மீண்டும் காவல்நிலையம் வந்து அதிகாரிகளை சந்தித்து தனது மாடு தற்போது பால் கறக்கிறது, என்பதால் தகுந்த ஆலோசனை வழங்கிய போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.




