முஸ்லிம் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் எந்த ஓர் உறுப்பினரையும் மற்றுமொரு உறுப்பினரால் பதிவி நீக்க முடியாது என்பது மரபாகும். எனவே “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணியில் நானும் ஓர் உறுப்பினராக பதவி வகிப்பதன் காரணத்தால் நான் பதிவி நீக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் உறுப்பினரொருவர் ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள செய்தி உத்தியோகபூர்வமற்ற செய்தி என்பதை அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முஸ்லிம் ஒன்றியத்தின் பொருளாளருமான கலீலுர் ரஹ்மான் ஊடக அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்தும் அதன் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட “ஒரே நாடு ஒரே சட்டம்”என்ற ஜனாதிபதி செயலணியில் நானும் ஓர் உறுப்பினராக பதவி வகிப்பதன் காரணத்தால் தாமாகவே முன்வந்து பதவி விலகாமையினால் ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்தும் அதன் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கொழும்பு மாநகர சபை முஸ்லிம் ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியிலிருந்தும் அதன் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக முஸ்லிம் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 16 உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு நான் கேட்ட போது அவ்வாறான எந்த நடவடிக்கையையும் தாம் எடுக்கவில்லை என்றும் அது பற்றிய கலந்துரையாடல்கள் எங்கும் இடம் பெறவில்லையென்றும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்கள் என அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.