தனது மனைவியின் கொடுமைகளை தாங்குவதை விட, சிறைச்சாலையில் இருப்பது எவ்வளவோ மேல் என, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார் ஒருவர்.
இந்த விசித்திர சம்பவம், இத்தாலியின் ரோம் நகரை ஒட்டிய கைடோனியா மாண்டெசெலியோ எனும் நகரில் நடந்துள்ளது.
அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதாகும் நபர் ஒருவர், போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக வீட்டுக்ககாவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
அந்த நபர் ஏற்கனவே பல மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். அவரின் தண்டனை காலம் முடிவதற்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ளன.
இந்நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த அந்த நபர் தனது வீட்டில் இருந்து தப்பித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
‘இனிமேலும் என்னால் வீட்டில் இருக்க முடியாது, என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீடு எனக்கு நரகம் போல உள்ளது.
இனிமேலும் என்னால் என் மனைவியுடன் ஒன்றாக இருக்க முடியாது. தயவு செய்து என்னை சிறைச்சாலையில் போட்டு விடுங்கள். என்னுடைய தண்டனை காலத்தை நான் சிறையிலேயே கழிக்கிறேன்’ என எங்களிடம் கோரிக்கை வைத்தார் என பொலிஸ் அதிகாரி ஃபிரான்செஸ்கோ கியாகோமோ ஃபெரான்டே தெரிவித்தார்.
அவர் வீட்டில் இருந்து தப்பித்தது, விதிமீறல் என்பதால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் விரும்பியதை போலவே, அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.