தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கண்டித்து யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கதவடைப்பு இடம்பெறுகிறது. வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. கருப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
அண்மையில், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறைக்கு படகுச்சவாரி செய்திருந்தனர். பிரதான மீனவர் சங்கங்கள் எதுவும் அதில் கலந்து கொள்ளாத நிலையில், எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டு பெரும்பாலான படகுகள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன.
இழுவைமடி மீன்பிடி முறையை உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டியும், சட்டமூலத்தை இதுவரை அமுல்ப்படுத்தாத கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக சுமந்திரனால் அறிவிக்கப்பட்டது.
இழுவைமடி மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள், ஒரு படகிற்கு 5,000 ரூபா வீதம் மாதாந்தம் பணம் வழங்குவதாகவும், அதை யாருக்கு வழங்குகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள் என்றும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், குருநகர் மீனவர்கள் அந்த கருத்தை நிராகரித்திருந்தனர். மீனவர் சங்கங்கள் தெரிவித்தபோது, ‘இந்திய இழுவைமடி மீன்பிடி முறையினாலேயே கடல் வளம் அழிக்கப்படுகிறது. எமது இழுவைமடி மீன்பிடி முறை கடல்வளத்தை அழிப்பதில்லை. இந்த முறையில் மீன்பிடியில் ஈடுபட நாடு முழுவதும் பல பகுதிகள் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.30 வருடங்களாக இந்த முறையில் தாம் குறிப்பிட்ட பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற போதும், அங்கு கடல்வளம் அழிக்கப்படவோ, மீன் இனப்பெருக்கம் இல்லாமல் போகவோ இல்லை. சுமந்திரன் அரசியல் நோக்கங்களிற்காக இந்த விவகாரங்களை கையிலெடுத்துள்ளார்’ என சாடியிருந்தன.
இந்த நிலையில், எம்.ஏ.சுமந்திரனை கண்டித்து இன்று (26) குருநகர் பகுதியில் முழுமையான கதவடைப்பு இடம்பெறுகிறது.
வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. சந்தைகள் திறக்கவில்லை.
இன்று எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக மீனவ சங்கங்கள் கண்டன பேரணியும் நடத்தவுள்ளன.