சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த வழக்கில் ஆர்யா கான் கைதான நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.
மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3ஆம் திகதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை முதல்முறையாக அவரின் தந்தை ஷாருக் கான் இன்று நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் மன்னத் பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்திருந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷாருகானின் வீட்டில் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோலவே இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் சோதனை நடந்தது. அவரது மொபைல் போன், லேப்டாப் மற்றும் மின்னணு சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆர்யன் கானின் வாட்ஸ்அப் விவாதத்தில் அனன்யா பாண்டே பெயர் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இருவரும் போதைப்பொருள் தொடர்பாக விவாதித்துள்ளனர்.
அவர் விசாரணைக்காக வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு என்சிபி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அனன்யா பாண்டே, 22, 2019 இல் திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் நடிகர் சங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோரின் மகள் ஆவார்.