மறவன்புலவு பகுதியில் மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (19) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
கோப்பாய் வடக்கை சேர்ந்த 34, 47 வயதுடைய இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறவன்புலவிலுள்ள தனியார் காணியொன்றில் நீண்டகாலமாக மணல் திருட்டு நடந்து வருகிறது. காணி உரிமையாளருக்கு தெரியாமல், இரவில் அங்கு நுழையும் திருடர்கள், டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த திருடர்களை மடக்கிப் பிடிக்க நினைத்த காணி உரிமையாளரும், இன்னொருவரும் நேற்றிரவு தமது காணிக்கு சென்றுள்ளனர். இதன்போதே இவர்கள் தாக்கப்பட்டனர்.
“நேற்றிரவு எமது காணிக்கு சென்றோம். அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினோம். யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. மணல் ஏற்றி முடிந்த பின்னர்,எம்மை தாக்கினார்கள். மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் மறவன்புலவை சேர்ந்தவருக்குரியது. அதை அடையாளம் காட்ட முடியும்“ என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.